எழுதியவர்: மௌலவி S.செய்யித் அலி பைஸி
(முதல்வர்: பிர்தௌசிய்யா அரபிக்கல்லூரி மற்றும் கதீஜதுல் குப்ரா பெண்கள் கல்லூரி, நாகர்கோயில்)
இறைவனின் அருளால் தமிழகத்தில் தவ்ஹீது மணம் பரப்பும் மஸ்ஜிதுகளும் மர்கஸ்களும் பெருகிய வண்ணமுள்ளன. அதே நேரம் அந்த மர்கஸுகளுக்கு உயிர்நாடியாகத் திகழும் ஆலிம்கள் எண்ணிக்கை அவற்றை நிரப்புகின்ற அளவுக்கு போதுமானதாக இல்லை. கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. மார்க்கக் கல்வியை கற்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் தேய்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலை நீடித்தால் இஸ்லாமிய சமூகம் மார்க்க அறிவுப் பஞ்சத்தால் மிகுந்த பாதிப்புக்குள்ளாவதை தவிர்க்க முடியாததாகிவிடும் என்ற கவலையுடன் எழுதப்பட்டதே இந்தக் கட்டுரை.
அண்டை மாநிலமான கேரளாவாக இருந்தாலும் அல்லது வட மாநிலங்களாக இருந்தாலும் அங்கெல்லாம் மார்க்க கல்வித் தாகம் குறையாமல் இருக்கும்போது நமது மாநிலமான தமிழகத்தில் ஏன் இந்த நிலை இதை மாற்றுவதற்கு என்ன வழி என்பதைக் குறித்து ஆராயக் கடமைப்பட்டுள்ளோம்.
"முஃமீன்கள் ஒட்டு மொத்தமாக புறப்பட்டுச் செல்லலாகாது, ஆனால் அவர்களில் ஒவ்வொரு வர்க்கத்தாரிலிருந்தும் ஒரு தொகையினர் மார்க்கத்தைக் கற்றுக் கொள்வதற்காகவும் (கல்வி கற்று) திரும்பி வரும்போது அவர்களை எச்சரிப்பதற்காகவும் புறப்பட்டிருக்க வேண்டாமா? அவர்கள் இதன் மூலம் தவறிலிருந்து விலகிக் கொள்வார்கள்'' (அல்குர்ஆன் 9:122)